சென்னை: ''அகில இந்திய அளவில், குற்ற வழக்குகளில், தண்டனை பெற்று தருவதில், தமிழகம், மூன்றாம் இடம் பெற்றுள்ளது,'' என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில், குற்ற வழக்கு தொடர்வு துறையின், மாநில அளவிலான சீராய்வு கூட்டம், நேற்று நடந்தது. அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை வகித்தார். குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குனர் ராமமூர்த்தி, இணை இயக்குனர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், குற்ற வழக்கு தொடர்வு துறையின் கீழ் பணிபுரியும் துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வின் போது, குற்ற வழக்குகளில், அதிகப்படியான தண்டனைகள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் பேசுகையில், ''அகில இந்திய அளவில், குற்ற வழக்குகளில், தண்டனை பெற்று தருவதில், தமிழகம், மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமான, அரசு வழக்கறிஞர்களை பாராட்டுகிறேன். அடுத்து முதலிடம் பெற, சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.இத்துறையில் பணிபுரியும், அரசு வழக்கறிஞர்களின் நலன்களுக்காக, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு, அரசு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அமைச்சரிடம் வழங்கப்பட்டது. 'கோரிக்கைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் உறுதி அளித்தார்.