விக்கிரவாண்டி;விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க நுகர் அதிர்வெண் அடையாள சென்சார் துவக்க விழா நடந்தது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தை திருட்டை தடுக்க நவீன நுண் அதிர்வெண் சென்சார் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு நேற்று முதல் மருத்துவமனை வார்டில் பயன் பாட்டிற்கு வந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., கதிர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு பிரிவு துறைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, வில்வபிரியா, குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் பிரபாகரன், மகப்பேறு பிரிவு டாக்டர் ரம்யா, செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, வார்டு மேலாளர் அஜீத்குமார், பணியாளர்கள் அமராவதி, சாரதபிரியா, அபிநயா உட்பட பலர் பங்கேற்றனர்.புதிய கருவியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த கல்லுாரி டீன் குந்தவி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:மருத்துவமனைகளில் குழந்தை திருடு போவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் இணைந்து, மருத்துவமனையில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நுண் அதிர்வெண் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தவுடன், குழந்தை, தாய், உதவியாளர் விபரங்களை ஐ.எம்.எஸ்., ஆப்பில் சேமித்து, தனித்தனியே குழந்தைக்கும், தாய்க்கும், உதவியாளருக்கும் டேக் அணிவிக்கப்படும்.இந்த டேக் அணிந்து குழந்தையை வார்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது, வார்டு முன் நுழைவு பகுதியில் உள் ஆன்டெனா மூலம் சென்சார் செய்யப்படும். டேக் அணிந்துசெல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காது. டேக் அணியாதவர்கள், செவிலியர்கள் கூட குழந்தையை வார்டை விட்டு வெளியே துாக்கி வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். மேலும் குழந்தை, தாய், உதவியாளர் புகைப்படமும் இங்குள்ள வீடியோ மானிட்டரில் தெரியும் . வேறு அன்னிய நபர்கள் வார்டின் உள்ளே நுழைந்தாலும், தாய், குழந்தையின் நகர்வுகளை கண்காணிக்க இந்த சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மனையின் மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு குழந்தை திருட்டு தடுக்கப்படுவதுடன், தாய்மார்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கல்லுாரி டீன் குந்தவி தேவி கூறினார்.