வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் 47 இடங்களை கைப்பற்றிய, காங்., கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் பா.ஜ., ஆட்சியை இழந்தது.

ஆட்சியை பிடித்த காங்., கூட்டணி :
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவ.,30 முதல் டிச.,20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,23) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் காங் கூட்டணி முன்னிலை வகித்தது.
இதில், 41 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை பெற முடியும் என்ற நிலையில், 40 க்கும் அதிகமான இடங்களில் காங்., கூட்டணி முன்னிலையில் இருந்தது. காங்., இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளில் காங்.,ஐ விட ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
காங்., கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கூட்டணியில், காங்., - 16, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 30 மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியை பறிகொடுத்த பா.ஜ., இம்முறை 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜார்கண்ட் விகாஷ் மோர்சா 3 தொகுதிகளிலும், ஏ.ஜே.எஸ்.யூ., 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்? :
காங்., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதால், ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைவராக இருக்கும் ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் கருத்து கணிப்புக்களில், அதிகமானவர்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக ஹேமந்த் சோரனே இருந்தார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE