கும்மிடிப்பூண்டி : தேசிய அளவிலான சிலம்ப போட்டியில், தங்கம் வென்ற இரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டில்லியில், கடந்த, 3ம் தேதி முதல், 9ம் தேதி வரை, 65வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில், சிலம்பாட்ட போட்டிகளில், 19 வயது ஆண்கள் பிரிவில், கும்மிடிப்பூண்டி, கே.எல்.கே., அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2, பயிலும் பி.லோகேஷ் முதல் இடம் பிடித்து, தங்கப்பதக்கம் மற்றும் கோப்பை வென்றார். அதே பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும், வி.பாபு என்ற மாணவன், 14 வயது ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் மற்றும் கோப்பை வென்றார்.
தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த, இரு அரசு பள்ளி மாணவர்களும், நேற்று கும்மிடிப்பூண்டி திரும்பினர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், பொது மக்கள் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை அணிவித்து, பேண்டு வாத்தியம் முழங்க, இருவரையும், பள்ளி வரை, பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்று உற்சாகப்படுத்தினர். தங்கம் வென்ற மாணவர்களையும், பயிற்றுனர் வினோத்குமாரையும் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE