சேலம்: உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும்,திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
சேலம் வந்த முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி., குறித்து சிறுபான்மையினர் அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செய்தி வெளியிடுகின்றனர். இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டசபையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் பிரச்னை இல்லை. தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் அச்சம் தேவையில்லை.

தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்கிறது. அமைதியை குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.சிறப்பான நிர்வாகத்தால் தமிழகம் மத்திய அரசின் விருதை பெறுகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இடையூறு செய்கிறார். ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக தகவல் இல்லை.
எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள். நீதிபதிகள். அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கூட்டணி பொறுத்தவரை சில இடங்களை விட்டு தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முறையாக நடந்தது. ஓட்டு மையங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. சேலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆனால், முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும், திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர். பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE