திருநெல்வேலி: இந்தியா முழுவதும் நேற்று(ஜன.,17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.

இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் ஆவதால் பாஸ்டேக் என்னும் ஆன்லைன் முறை அமலுக்கு வந்தது. இதன்படி காரின் உரிமையாளர், ஏதாவது ஒரு வங்கிகணக்கில் பாஸ்டேக் கணக்கில் பணம் செலுத்தி அதற்கான ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்வார்கள். வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை, சுங்கச்சாவடிகளில் உள்ள தானியங்கி ஸ்கேனிங் மூலம் கட்டணத்தை கணக்கிட்டு வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளப்படும். இதனால் நீண்டநேரம் வரிசையில் நின்று பணம் செலுத்த, கால தாமதம் ஏற்படாது. எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் பாஸ்டேக் முறையில் ஆன்லைன் கட்டணமுறைக்கு மாறும்படி கேட்டுக்கொண்டனர். இருப்பினும் தினசரி சுங்கச்சாவடிகளில் செல்வோர் பாஸ்டேக் முறைக்கு மாறினர். எப்போதாவது வரும் கார் உரிமையாளர்கள், அதற்கு காலஅவகாசம் கோரியிருந்தனர். ஏற்கனவே டிசம்பர் 15 வரை வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜன.,15 உடன் முடிவுக்கு வந்தது. நேற்று 17 ம் தேதி இரவு முதல் பாஸ்டேக் மட்டுமே அமலில் உள்ளது.
அதேநேரத்தில், பாஸ்டேக்கிற்கு பதில், பணம் செலுத்தும் கவுண்டர்களில் வழக்கமான கட்டணத்தை போல இருமடங்கு கட்டணம் வசூலித்தனர். குறிப்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த வாடகை காருக்கு ஒரு முறை கடந்து செல்ல 45 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 90 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. ரிடர்ன் வர 135 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் 270 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாங்குநேரி சுங்கச்சாவடியில் இந்த அதிரடி கட்டண வசூல் நடக்கிறது. ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தென்மண்டல அதிகாரி பவன்குமாரிடம் கேட்டபோது, அப்படியா..இருக்காதே என மறுத்தார். இரட்டிப்பு கட்டண வசூல் குறித்து அதிகாரிகளுக்கே தெரியவில்லை.
நாங்குநேரி சுங்கச்சாவடியில் கழிப்பறை கூட கிடையாது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு ஓட்டலோ, வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்துச்செல்லவோ எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படாமல் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக உடைந்த பெயர் பலகைகள் இன்னமும் சரிசெய்யப்படவில்லை. விபத்துச்சாலைகள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை. பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முழுமையாக அமைக்கப்படாமல் மழைக்கும் வெயிலுக்கு காயவேண்டியுள்ளது.

எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்வதற்கு வாகனஓட்டிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
