வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை போலீசார் சுட்டு கொன்று, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். இதன் பின்னர், அவரின் மனைவியை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர்.

உ.பி. மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பதாம், இவர் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு சென்ற சுபாஷ் , தனது ஒரு வயது குழந்தை பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருமாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 15 குழந்தைகள், மற்றும் சில பெண்கள் என 20-க்கும் மேற்பட்டோர் சுபாஷ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது திடீரென வீட்டுக்கதவை உள்புறமாக தாழிட்டு துப்பாக்கி முனையில் தனது மனைவி, குழந்தைகள், பெண்கள் எ அனைவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைய கைதியாக பிடித்து வைத்தார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரு்மபாததால், அங்கு சென்ற பெற்றோர், வீட்டின் கதவு பூட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கதவை தட்டியும் திறக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டிற்குள் அதிரடியாக நுழைய முயன்றனர். அப்போது, சுபாஷ், அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளான். இதில் 3 போலீசார் கிராமவாசிகள் சிலர் காயமடைந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தியும் சுபாஷ் குழந்தைகளை விடுவிக்கவில்லை. இதனையடுத்து போலீசார் , அவரை சுட்டுக்கொன்று, அனைத்து குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். சுபாஷ் உடல் அப்புறப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில், வீட்டில் இருந்த சுபாஷின் மனைவியை அக்கம்பக்கத்தினர் வெளியே இழுத்து வந்து சராமரியாக அடித்தனர். கற்கள் மற்றும் செங்கல்களை கொண்டு தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE