வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பாக்., உடன் தொடர்பு இருப்பதாக கூறிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மனநிலை சரியில்லை என்றும் அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்.,08ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.,11ல் நடக்கிறது. இதற்காக ஆளும்கட்சியான ஆம்ஆத்மி, பாஜ., மற்றும் காங்., உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே டில்லி தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாக்., அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, அவர் இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் டில்லி கரவல் நகரில் பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், டில்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் நம்பவில்லை. பாகிஸ்தானில் உள்ள எஜமானர்களிடம் சொல்லி, தனக்கு ஆதரவாக ட்வீட் செய்ய வைக்கிறார், என்றார். இதற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு பாக்., உடன் தொடர் இருப்பதாக யோகி கூறுகிறார். இதை அவர் நிரூபிக்க வேண்டும்.

மனநிலை சரியில்லாத யோகிக்கு டில்லியில் சிறந்த மனநல டாக்டரை கொண்டு இலவச சிகிச்சை மேற்கொள்ளலாம். யோகியின் பேச்சுக்காக அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்; பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக பேச தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டிருந்தும் இன்னும் அமைதியாக உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் முன்பு தர்ணாவில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.