வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 54 முதல் 60 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என டைம்ஸ் நவ் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல் வருகின்ற 8ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.,11ல் நடக்கிறது. இதில் ஆம்ஆத்மி, பாஜ., காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கடந்த 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67ல் வென்று அமோக வெற்றிப் பெற்றது. மீதமுள்ள 3 தொகுதிகளில் பாஜ., வென்றது. இந்நிலையில் பிப்.,8 ல் நடக்கும் தேர்தல் குறித்து 'டைம்ஸ் நவ்' கருத்துகணிப்பு நடத்தியது. டில்லி மக்களிடையே நடத்திய கருத்துகணிப்பில் கட்சிகளின் வெற்றி மற்றும் ஓட்டு சதவீதம் ஆகியவற்றை கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.

கருத்துகணிப்பின் படி, ஆம்ஆத்மி 54 முதல் 60 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைக்கும் எனவும், பாஜ.,வுக்கு 10 முதல் 14 இடங்களும், காங்.,க்கு அதிகபட்சம் 2 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஓட்டு சதவீதத்தை பொறுத்தவரையில் ஆம்ஆத்மி 52 சதவீத ஓட்டுகளை பெறும் எனவும் பாஜ., 34 சதவீதம் பெறும் எனவும், காங்., 4 சதவீதம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் ஆம்ஆத்மிக்கு 2.5 சதவீத ஓட்டுகள் குறைவாகவும், பாஜ.,வுக்கு 1.7 சதவீத ஓட்டுகள் அதிகமாகவும் கிடைக்கும் என கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.
