இந்த செய்தியை கேட்க
லாகூர்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில், தலா, ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஹபிஸ் சயீது. லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவர், ஜமாத் உத் தவா என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், ஹபிஸ் தொடர்புடைய அமைப்புகள் மீது, ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்தது. பாகிஸ்தானில் மட்டும், ஹபிஸ் மீது, 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், இந்தியா, அவருக்கு எதிரான ஆதாரங்களை வழங்கிய போதும், அவர், பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்.

கடந்த, 2017ல் ஹபிஸ் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது காவலை நீட்டிக்க, நீதித்துறை மறு ஆய்வு வாரியம் மறுத்ததால், 11 மாதங்களுக்குப் பின், நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதன் பின், ஹபிஸ், பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்.இந்நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து, ஹபீஸ், அவரது கூட்டாளி ஜாபர் இக்பால் ஆகியோர் மீது, பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத வழக்குகளை தொடர்ந்தது. பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி மற்றும் பண மோசடி செய்ததாக, பாகிஸ்தானின் பஞ்சாப் போலீசின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ஹபிஸ் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் ஹபிசுக்கு, தலா, ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இன்று(பிப்.,12) தீர்ப்பளித்தது.மேலும், அவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இரண்டு வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனையை, ஹபீஸ், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, நீதிபதி, அர்ஷத் உசேன் புட்டா அறிவித்தார்.ஹபிஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளி, ஜாபர் இக்பாலுக்கும், தலா, ஐந்தரை ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE