புதுடில்லி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77,764 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 13 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். சமீபத்தில் டில்லியை சேர்ந்த 45 வயதான ரோகித் தத்தா, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, அங்குள்ள சப்தர்ஜங் மருத்துவனையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். தற்போது, முழுவதுமாக குணமடைந்துள்ள அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ரோகித் தத்தா கூறியதாவது: பிப்., மாதம் இத்தாலியில் தோல் கண்காட்சியில் கலந்து கொண்ட போது, அங்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. எனது இரு மைத்துனர்களுடன் ஐரோப்பாவிற்கு சென்றேன். நாங்கள் மூவரும் ஆரோக்கியமாக இருந்தோம், எந்த அறிகுறியும் எங்களுக்கு தெரியவில்லை. விமான நிலையத்திலும் பாதிப்பு குறித்து எங்களை பரிசோதிக்கவில்லை. காய்ச்சல் மட்டுமே இருந்ததால் மாத்திரை உட்கொண்டு படுத்தேன். அடுத்த சில நாட்களில் இத்தாலியில் கொரோனா பரவத்தொடங்கியது. அங்கிருந்து வந்ததால் நான் பயந்தேன். என்னை பரிசோதனை மேற்கொள்ளுமாறு குடும்பத்தார்கள் வலியுறுத்தினர்.
வீடியோ கால்
இதனால், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். உறுதிப்படுத்தப்பட்டதும் 30 நிமிடங்களில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றினர். இதனால், அவரின் குடும்பத்தார்கள், நண்பர்களின் வீடுகளிலும், இவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் அனைவரும் சோதிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட நான், எனது குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசவும், பொழுதுப்போக்க நெட்பிளிக்ஸ் இணையத்தையும் பார்த்து வந்தேன்.

அமைச்சர் வாழ்த்து
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் என்னை தொடர்பு கொண்டு ஹோலிக்கு வாழ்த்து கூறினார். மேலும், நான் எப்படி உணர்கிறேன், எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா, மருத்துவமனையில் உணவு எனக்கு பிடித்திருக்கிறதா என்றும் கேட்டார். கொரோனா நோயாளிகளின் நிலையை அவரும் பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் சுகாதார அமைச்சர் தொடர்பு கொண்டதை கற்பனை செய்ய முடியவில்லை, அவ்வளவு எளிமையான மனிதர்.

நான் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை வார்டு, சொகுசு ஓட்டலை போன்று இருந்தது. அங்குள்ள ஊழியர்கள் உயர் சுகாதாரத்தை பராமரித்தனர். படுக்கையின் மேற்பரப்பை சுத்தம் செய்தனர், ஒரு நாளைக்கு இருமுறை கையுறைகளை மாற்றினர். எனது அறையில் ஒவ்வொரு நாளும் 'சாணக்ய நீதி' படிப்பதையும், இருமுறை பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) செய்வதையும் பின்பற்றினேன். எனக்கு கொரோனா உறுதிப்படுத்தியபோது, இறக்கப்போகிறேன் என பயந்தேன். மருத்துவமனை ஊழியர்கள் மிகவும் உதவினர். தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், எனக்கு உதவிய செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அறிகுறிகள் இருந்தால், தங்களின் பயண வரலாறுகளை துல்லியமாக கூறி பரிசோதனை மேற்கொள்ளுங்கள். அப்போது தான் உடன் பயணித்தவர்களும், அவர்களின் குடும்பத்தார்களின் உயிர்களும் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE