சென்னை: 'கொரோனா பாதிப்பை தடுக்க, நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்' என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நாடு முழுவதையும், 2 முதல் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். இதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் நடவடிக்கை தான் கொரோனா பாதிப்பை தடுக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு பாராட்டு
தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை வரவேற்று அவர் பதிவிட்டதாவது: என் போன்றோரின் யோசனையை ஏற்று, மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த, தமிழ்நாடு உட்பட்ட மாநில அரசுகளுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் நன்றி. முழு ஊரடங்கைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். முக்கியமாகப் பெரிய கிராமங்கள், பேரூர்கள், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில்செயல்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டினாலும் தமிழ்நாடு அரசு துணிவுடன் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE