பு.புளியம்பட்டி: கள்ளத்தனமாக மது விற்பவர்கள், அதை வாங்க வரும் குடிமகன்களால், கொரோனா பரவாதா? என்று, புன்செய்புளியம்பட்டி பகுதி மக்கள், கேள்வி எழுப்பியுள்ளனர்.
புன்செய்புளியம்பட்டியில், சத்தி சாலை, பவானிசாகர் சாலைகளில் செயல்படும், தாபா மற்றும் பொது இடங்களில், மது விற்பனை அமோகமாக நடக்கிறது. அதேபோல் புன்செய்புளியம்பட்டி-காவிலிபாளையம் சாலை, தில்லை நகர், வாரச்சந்தை, பொன்னம்பாளையம் அருகே, புங்கம்பள்ளி பகுதியிலும் மது விற்பனை நடக்கிறது. கொரோனா தடையையும் மீறி குடிமகன்கள் வருகின்றனர். குடியிருப்புக்கு நடுவே நடக்கும் மது விற்பனையால் மக்கள் சிரமப்படுகின்றனர். எஸ்.பி., நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் எந்நேரம் சென்றாலும் மது வாங்கலாம். இதனால் குடிமகன்கள் வழக்கம்போல், ஊரடங்கு தடையை மறந்து வந்து செல்கின்றனர். அவ்வப்போது வரும் ரோந்து போலீசாரை, மது விற்பவர்கள், கவனித்து விடுவதால், தடையின்றி வியாபாரம் நடக்கிறது. இதனால், இவர்களால் கொரோனா பரவாது என்று, அதிகாரிகள் நினைத்து விட்டார்களோ? என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு மக்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE