புதுடில்லி: ராணுவம் தனது செயல்பாடுகளை முன்பு போலவே மேற்கொண்டு வருவதாகவும், கொரோனா வைரஸ் நோயால், அதன் தயார்நிலை பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மனோஜ் முகுந்த் பேசியதாவது: வழக்கமான நடவடிக்கைகள் சிலவற்றை ஒத்திவைத்திருக்கிறோம். நிலைமை சீரானதும் அவற்றை மாற்றியமைப்போம். நாடு பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் வேளையில், எல்லையை பாதுகாப்பாக வைத்திருப்பது எங்களின் முழு பொறுப்பு. தற்போதைக்கு கொரோனா வைரஸை (கோவிட்-19) எதிர்ப்பதே எங்கள் நோக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை திறம்பட பின்பற்றுவது, எதிர்கால சூழ்நிலைக்கு சொந்த ஆதாரங்களைத் தயார்ப்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல், அதனை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்க இந்தியா போராடி வருகிறது. அதேநேரம், வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தால், தக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த கொடிய வைரஸை தடுக்க அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். இதுபோன்ற பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் மற்றும் பயிற்சியை ராணுவம் பெற்றுள்ளது. சிவில் அதிகாரிகள் அழைத்தால், உதவுவதற்கு தயார்நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.