சென்னை: சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன.
இது தொடர்பான பல கோரிக்கைகள், சென்னையில் உள்ள தென் கொரிய தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளன. இதில் சில ஆரம்ப நிலையில் உள்ளது. மற்றவை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளன.
தென் கொரிய தூதரகத்தில் பணிபுரியும் யுப் லீ என்ற அதிகாரி கூறுகையில், இரண்டு இரும்பு தொழிற்சாலைகள், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சேவைத்துறையை சேர்ந்த நிறுவனம் ஒன்று சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தொழில்துவங்க விரும்புகின்றன. போஸ்கோ மற்றும் ஹூண்டாய் எக்கு தொழிற்சாலை, ஆந்திராவில் தொழிற்சாலை அமைப்பதை இந்தய அரசு எதிர்பார்க்கிறது.
ஆந்திராவில் எக்கு தொழிற்சாலை அமைக்க, துறைமுக வசதியுடன் கூடிய 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. முதலீடு செய்ய வேண்டும் என அந்த நிறுவனங்கள் முடிவெடுத்த உடன், ஆந்திராவில் தொழிற்சாலை துவங்கப்படும். இந்தியாவில், தொழில்துவங்க இன்னும் தென்கொரியாவை சேர்ந்த சில நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், கொரோனா காரணமாக அது தள்ளி போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சீனாவில் செயல்படும் ஜப்பான் நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளன. இதற்காக அந்தநிறுவனங்களுக்கு ஜப்பான் அரசு நிதியுதவி அளிக்க உள்ளது.
இது தொடர்பாக எச்டிஎப்சி வங்கி சேர்மன் தீபக் பரேக் கூறுகையில், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் வியட்நாம், தாய்லாந்து செல்வதற்கு பதில், இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான வழிகளை நாம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக்கூறினார்.