திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் உள்ளன.

இந்நிலையில், 'இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலம் கேரளம்தான்' என, முதல்வர் பினராயி விஜயன் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரள மாநிலம் முழுவதும் 387 பேருக்குக் கொரோனா ஏற்பட்டது; அதில், 167 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 218 பேருக்கு கொரோனா பூரணமாகக் குணமாகியுள்ளது. கொரோனா பாதித்ததில், 264 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்; 8 பேர் வெளிநாட்டினர். 114 பேருக்குத் தொடர்பு மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது, 97,464 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 522 பேர் மருத்துவமனைக் கண்காணிப்பில் உள்ளனர்.

கைகொடுக்கும் ஆயுர்வேதம்!
பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்குகிறோம். அது நல்ல பலனை அளித்து வருகிறது. இதனால், 56 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். விரைவில் 100 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்துவோம். இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது, 9ம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.