வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி உலகை ஏமாற்றியதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று குறித்து, முன்னரே எச்சரிக்கை விடுத்த மருத்துவர்களையும், செய்தியாளர்களையும் சீனா காணாமல் ஆக்கியது. கொரோனா பரவலைத் தடுக்கவும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. மேலும் கொரோனா தொற்று குறித்து உலகுக்கு பொய் சொல்லியது சீனா. இதனால் தான், இந்த வைரசால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும். மிசவுரி மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்புகளுக்கு சீன அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.

'வெளிநாட்டு அரசுகளுக்கு, அமெரிக்க அரசு சட்டப் பாதுகாப்பு வழங்குவதால், இந்த வழக்கு மிசவுரி மாகாணத்துக்கு ஆதரவாக அமைவது கடினம்' என, சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

20 டிரில்லியன் இழப்பீடு!
கொரோனாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடாக, 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்' எனக் கோரி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து ஏற்கனவே வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.