இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவார்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த சாதனைகளுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வு குழு தலைவருமான இன்சமாம் கூறியுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் ரமிஸ் ராஜாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவரான இன்சமாம் உல் ஹக்கும் யுடியூப் சேனல் ஒன்றிற்காக கிரிக்கெட் குறித்த டாக்ஷோவில் பங்கேற்றனர். அதில், தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்கள் இயல்பாகவே திறன் பெற்றிருந்தாலும் சில சமயம் தோல்விக்கு மிகவும் அஞ்சுகிறார்களே என இன்சமாமிடம் ரமிஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இன்சமாம், “ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அவர்களுக்கு இடம் கிடைக்கும், தோற்றால் அவர்களை கைவிட்டுவிடுவார்கள் என தொடருக்கு தொடர் வீரர்கள் சிந்தித்தால், அவர்களால் முழு திறனுடன் விளையாட முடியாது. இம்ரான் கான் அப்படி தான் ஒரு தொடரில் வீரர்கள் சொதப்பினாலும் அவர்களை நீக்காமல், வாய்ப்பளித்து அடுத்த போட்டியில் சிறப்பாக ஆட வைத்தார்.
'எங்கள் காலத்தில், இந்தியா பேட்டிங்கில் வலுவாக இருந்தது. பேட்ஸ்மேனாக எங்களது சாதனைகள் அவர்களை விட சிறப்பாக இல்லை. ஆனால் நாங்கள் 30 அல்லது 40 ரன்கள் எடுத்தாலும் அணிக்காக எடுத்தோம். அவர்கள் சதமடித்தாலும், அதனை அணிக்காக செய்யவில்லை, அவர்களுக்காக ஆடினார்கள். அது தான் வித்தியாசம்.

தற்போது நமது அணி வீரர்களும் அவர்கள் இடத்தை இழப்பதற்கு அஞ்சுகிறார்கள். தம்மை நிலைநிறுத்த ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் தான் இருப்பதாக நினைக்கிறார்கள். அதனால் அவர்களால் அணியை தேவையை உணர முடியவில்லை. அணிக்காக விளையாடுவதற்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் கேப்டனும், பயிற்சியாளரும் அளிக்க வேண்டும்” என்றார். இன்சமாமின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE