பீஜிங்: 5 வருட ரகசிய திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ள சீனா, டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளது.
சீனாவிலிருந்த பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் அதிக உயிர் பலியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தி உள்ளதால், பொருளாதாரமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது.
ஆனால் சீனா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. அங்கு சுற்றுலா தளங்கள், மால்கள், ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும் செயல்படத் துவங்கி உள்ளன. இதனால் சீன பொருளாதாரம் சீரடைய துவங்கி உள்ளது.
இந்நிலையில் சீனா, டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து டிஜிட்டல் 'யுவான்' கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளன. இதனை வங்கி அளிக்கும் தனி வாலட் ஒன்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் இப்பயன்பாட்டை துவங்கியதும் இதனை மெல்ல விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் கரன்சி திட்டத்தை 5 வருடமாக ரகசியமாக தீட்டிய சீனா, தற்போது அதனை நிறைவேற்றி உள்ளது. உலக நாடுகளில் பிட்காயின்கள் பயன்பாடு இருந்தாலும், ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நிறுவனங்கள் ஒப்பந்தம்:
இந்நிலையில் சீனாவின் சியோங் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்டு உள்ளிட்ட 19 பிரபல உணவு நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த ஒப்பந்தமிட்டுள்ளன.