லக்னோ : உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியதை தொடர்ந்து, தொழிலாளர்களின் வேலை நேரத்தை, 12 மணி நேரமாக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை, உத்தர பிரதேச அரசு திரும்பப் பெற்றது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கொரோனா வைரசால், மாநிலத்தின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, மாநில அரசு, தொழிலாளர்கள் சட்டங்களில், ௩௮ திருத்தங்களை செய்துள்ளது. கடந்த, 1936ம் ஆண்டின் அடிப்படை ஊதிய சட்டம், 1932ம் ஆண்டின் தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம், 1976ம் ஆண்டின் பிணைக்கப்பட்ட தொழிலாளர் அமைப்பு ஒழிப்பு சட்டம், 1996ம் ஆண்டின் கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் ஆகிய, நான்கு சட்டங்கள் மட்டும், முன்பு இருந்தவாறு நடைமுறையில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய மஸ்துார் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த அறிவிப்பை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, வேலை நேரத்தை, ௧௨ மணி நேரமாக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை, மாநில அரசு திரும்பப் பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE