கோவை:நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என்பதால், சிறப்பு ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கோவை துடியலுார், வெள்ளக்கிணறு ராகவேந்திரா காலனியை சேர்ந்த வேதமுத்து, 66 என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் ஐந்து பேர் அடங்கிய கும்பல், 50 சவரன் நகை, 45 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து தப்பியது.கொள்ளையர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகை, பணத்தை கொள்ளையடித்தவர்கள் இந்தி, ஆங்கிலத்தில் பேசிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், தப்ப வழியுள்ளதால், தனிப்படை போலீசார், கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'ஆறு தனிப்படைகள் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகிறது. கொள்ளை நடத்த வீட்டில் கைரேகைகள், கால்தடங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE