ஓசூர்: கர்நாடகாவை கடந்து, தமிழக எல்லையை அடையும் கனரக வாகனங்கள், சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது.
தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள, தற்காலிக சோதனைச்சாவடியில், வெளிமாநிலங்களில் இருந்து, இ-பாஸ் அனுமதியுடன் தமிழகம் வரும் வாகனங்கள் பதிவு செய்ய நிறுத்தப்படுகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் டிவைடர் வைத்துள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி இருந்தது. இதற்கிடையே, கார் உள்ளிட்ட தமிழக வாகனங்களுக்கு, இ-பாஸ் அனுமதி இருந்தும், கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 2 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன.
இந்நிலையில், ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், கர்நாடகாவிலிருந்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், எந்த சோதனையுமின்றி அதே சாலையில் அனுமதிக்கப்பட்டன. இதனால், அந்த வாகனங்களை சர்வீஸ் சாலையில் செல்ல வழிவகை செய்து, கார் உள்ளிட்ட வாகனங்களை மட்டும், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்தால், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க முடியும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவை கடந்து, தமிழகத்துக்குள் நுழையும் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படாமல், சர்வீஸ் சாலையில் விடப்பட்டு, ஜூஜூவாடி மேம்பாலம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இணைய, அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். கார், பைக் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படுவதால், போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. இ-பாஸ் அனுமதியுடன் வரும் மக்களும், போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல், விரைவாக சோதனைச்சாவடியை கடக்க முடிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE