கரூர்: கரூர்-திண்டுக்கல் பழைய சாலையில், மின் கம்பம் அமைக்கும் பணிகள், மீண்டும் துவங்கியுள்ளன.
கரூர் வழியாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, தங்க நாற்கர சாலை அமைக்கும் முன், வெள்ளியணை, பாளையம், குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல், மதுரை வழியாக வாகனங்கள் சென்றன. இதனால், கரூர், திண்டுக்கல் பழைய சாலையில், வாகன போக்குவரத்து குறைந்தது. இந்நிலையில், கரூர்-திண்டுக்கல் பழைய சாலை தான்தோன்றிமலை பகுதியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பயணியர் விடுதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில், போதிய மின் கம்பங்கள் இல்லாததால், இரவு நேரத்தில் விளக்குகளின்றி இருந்தது. இங்கு, மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தான்தோன்றிமலை முதல், வெங்ககல்பட்டி பாலம் வரை, கடந்தாண்டு சாலை விஸ்தரிப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், சாலையின் நடுவே மின் கம்பங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, சாலைகளில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, கரூர்-திண்டுக்கல் பழைய சாலையில், மின்கம்பங்கள் அமைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE