பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் கட்டப்பட்ட, ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 170.22 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. கடந்த, 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் இன்னும் முடியாமல், இழுபறியாக உள்ளது.'மேன்ேஹால்' எனப்படும் ஆள் இறக்கும் குழிகள் அமைக்க, முறையான அறிவிப்புகள் இன்றி ரோடுகள் தோண்டப்படுகிறது.
ஒரு இடத்தில் பணி முடிவதற்குள், மற்றொரு இடத்தில் குழி தோண்டப்படுகிறது.தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாதது, குடிநீர் குழாய் உடைப்பு என தினமும் பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.ஆள் இறங்கும் குழிகள் அமைப்பதற்காக, ஒரே நாளில் குழி தோண்டப்பட்டு கான்கிரீட் பணி முடிந்து உடனடியாக மூடப்படுகின்றன. முறையாக தண்ணீர் ஊற்றி அவை பராமரிக்கவில்லை.திட்டப்பணிகள் முடிவதற்குள் பல இடங்களில் நீர் ஊற்று போல, ஆள் இறங்கும் குழிகளில் இருந்து தண்ணீர் வெளியேறியது. மேலும், பல இடங்களில் அவை சேதமடைந்துள்ளன.
வாகனங்கள் சென்றாலே ஆள் இறங்கும் குழிகளின் மேல் மூடிகள் கீழே இறங்கி முற்றிலும் சேதமடைகின்றன. கட்டுமான பணி, பொருட்கள் தரமின்றி இருப்பதால், வாகனங்கள் சென்றாலே குழிகள் உள்வாங்குகின்றன.ராஜாமில் ரோட்டில் சேதமடைந்த குழி அருகே, விபத்தை தவிர்க்க மரக்கிளை மற்றும் அட்டைகளை மக்கள் வைத்துள்ளனர். கட்டப்பட்ட சில மாதங்களிலேயே இத்திட்ட குழிகள் பெயர்ந்து வருவது குறித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.அதிகாரிகள் கண்காணிப்பு செய்து பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE