மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பாஜ மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் குற்றம்சாட்டினார்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா., முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தவ் தலைமையிலான அரசு தவறிவிட்டதாக பாஜ குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக பட்நாவிஸ் கூறுகையில், சிவசேனா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் செய்வதற்காக அல்ல. இதன் மூலம் செயலற்று கிடக்கும் அரசை தட்டி எழுப்ப வேண்டும். நாட்டின் மொத்த பாதிப்புகளில் 30 சதவீதம் மஹா.,வில் உள்ளது மிகவும் மோசமானது.

இதனால் மக்கள் மத்தியில் அரசின் மீது அதிருப்தி நிலவுகிறது. கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

மாநிலத்தில் நோய் தொற்றால் 41,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் தொற்றால் 1,454 பேர் பலியாகினர். இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE