ஊட்டி:கொரோனா' பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நடப்பாண்டு மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இதை மக்கள் கண்டுகளிக்க, பூங்கா நிர்வாகம் சார்பில், வண்ண மலர்கள் 'வீடியோ' எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்ட செவிலியர்கள், டாக்டர்கள், வருவாய் துறை ஊழியர்கள், பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஐந்து லட்சம் மலர்களை காண அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று போலீசார் மற்றும் குடும்பத்தார் தாவரவியல் பூங்காவுக்கு வந்தபோது, அவர்களை தோட்டக்கலை துறையினர் மலர் கொடுத்து வரவேற்றனர். 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் மலர் அலங்காரங்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணி சாம்ராஜ் கூறுகையில்,''பூங்காவுக்கு நீலகிரி எஸ்.பி., சசிமோகன் மற்றும் போலீசார், அவர்களது குடும்பத்தார் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் மலர்களை ரசிக்க வந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் மலர்களை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE