உடுமலை:கிளை படர்வு மேலாண்மையை பின்பற்றினால், மா சாகுபடியில், அதிக விளைச்சல் பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை வட்டாரத்தில், ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், குமாரபாளையம், தேவனுார்புதுார், மானுப்பட்டி, மொடக்குப்பட்டி, உடுக்கம்பாளையம் உட்பட பகுதிகளில், மா சாகுபடி பரவலாக உள்ளது.தென்மேற்கு பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், சாகுபடியில் கிளை படர்வு மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.அத்துறையினர் கூறியதாவது: மா சாகுபடியில், பருவமழையை பயன்படுத்தி, ஒருங்கிணைந்த களை நிர்வாகம் செய்ய வேண்டும். நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.களைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த, இடை உழவு செய்த பின், கொள்ளு, பாசிப்பயறு, தக்கைப்பூண்டு அல்லது மண் வளம் பெருக, எளிதில் மட்கும், பயறு இனவகைகளை விதைக்க வேண்டும். நோய் தாக்கிய காய்ந்த, கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, கீழே விழுந்துள்ள இலைகளை சேகரித்து, மண் புழு உரக்குழி அல்லது மண்புழு கூடாரத்திலோ மட்க செய்ய வேண்டும்.பயிர்கள் இழப்பு உள்ள பகுதியில், புதிய கன்று தற்போதைய சீசனில் நடவு செய்யலாம். அடர் நடவு முறையில் ஏக்கருக்கு, 160 கன்றுகளும், சாதாரண முறையில், 40 கன்றுகளும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.கன்றுகள் நடவு செய்யப்பட்ட முதலாம் ஆண்டில், மண் புழு உரம் மரத்திற்கு குறைந்தது 2 கிலோ இட வேண்டும். மரங்களின் வளரும் தருணத்தில், மிக நெருக்கமாக உள்ள மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். செப்., மாதத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ளலாம்.ஆரோக்கியமாக உள்ள கிளையை விட்டு விட்டு குறுக்கே நிழல் பகுதியில், வளரும் சிறு கிளைகளையும், கவாத்து செய்ய வேண்டும். மரத்தில், 5 கிளைகள் இருந்தால், 2 முதல் 3 கிளைகள் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்யலாம்.கவாத்து மூலம் மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கிளை படர்வு மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், புதுக்கிளைகளில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE