போத்தனூர் : மாஸ்க் இல்லாமல் சுற்றுவோரை மடக்கும் பணியில், போலீசார் துணையின்றி உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் மட்டும் ஈடுபடுவதால், சிக்குவோர் எளிதில் தப்புகின்றனர்.
பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடமாடுவோர், வாகனங்களில் பயணிப்போருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளில், பணிபுரியும் சுகாதார பிரிவினர் மேற்கொள்கின்றனர்.போலீசாரும் இதனை செய்யலாம். ஆனால், ஹெல்மெட் இன்றியும், போதையில் 'வாகனங்களை ஓட்டுவோரையும் பிடிக்க வேண்டிய கட்டாயத்தால், போலீசார் இதனை கண்டுகொள்வதில்லை.
உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், இதனை மேற்கொள்ளும் போது, பெரும்பாலானோர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பலர் வழக்கம்போல வாகனத்தில் பறந்து விடுகின்றனர். கார்களில் பயணிப்போர் இவர்களை, ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.இதனால் அபராதம் வசூலிப்பதை, முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை தவிர்க்க, இவர்களுடன் ஒரு போலீஸ்காரர் இருந்தாலே போதுமானது.
இந்த ஒத்துழைப்பையே, உள்ளாட்சி பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, மாநகராட்சி பகுதிகளில், போலீஸ் அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE