காஞ்சிபுரம் : சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காஞ்சிபுரம் ரயில்வே சாலை கடைகள் அடைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். வியாபாரிகள். விதிமுறையை மீறி கடை செயல்பட்டதால், போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின், அங்கு இருதரப்புக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், போலீசார் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த தந்தை, மகன் இருவரும் இறந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் ரயில்வே ரோடு, மார்க்கெட் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மேலும், நேற்று காலை, காந்தி சாலையில், இறந்த வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.உத்திரமேரூர்: உத்தரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் செல்போன் கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பஸ் நிலைய வளாகத்தில், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது படத்திற்கு, சங்கச் செயலர் விவேகானந்தன் தலைமையில், வணிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதை தொடர்ந்து, 40க்கும் மேற்பட்டோர், கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனவும், இந்த கோரிக்கை மனுவை, காஞ்சிபுரம் கலெக்டர், துாத்துக்குடி கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE