புதுடில்லி; 'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக விளம்பரம் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'பதஞ்சலி' நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, யோகா குரு பாபா ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனம் தெரிவித்தது. அந்த மருந்துக்கு, 'கொரோனில்' என, பெயரும் வைத்துள்ளது.ஆனால், 'கொரோனா மருந்து பற்றிய விபரங்களை தெரிவிக்க வேண்டும்; எந்த மருத்துவமனையில், இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது என, தெரிவிக்க வேண்டும். 'மத்திய அரசின் அனுமதி பெறாமல், இந்த மருந்தை விளம்பரம் செய்யக் கூடாது' என, மத்திய ஆயுஷ் அமைச்சகம், பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும், உத்தரகண்ட் மாநில பா.ஜ., அரசும், 'சளி-, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து என்று தான், உரிமம் வழங்கினோம்' என, தெரிவித்தது.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து பற்றி, மாநில உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக், மும்பையில் கூறியதாவது:போலி மருந்துகள் விற்கப்படுவதை, மாநில அரசு ஒரு போதும் அனுமதிக்காது. பரிசோதனை செய்யாமல், மருந்தை விற்கவோ, விளம்பரம் செய்யவோ, பதஞ்சலி நிறுவனத்துக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
ஆனால், தடையை மீறி விளம்பரம் செய்துள்ளதாக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது, பல மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், விளம்பரம் செய்தாலோ, மருந்தை விற்பனை செய்தாலோ, பதஞ்சலி நிறுவனத்தின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE