சென்னை; தமிழகத்திற்கு, ஜூலை மாதம், 72 ஆயிரத்து, 900 டன் யூரியா வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.டெல்டா மாவட்டங் களில், குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலும், நெல் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நடந்து வருகிறது.தமிழத்திற்கு ஒவ்வொரு மாதமும் தேவையான உரத்தை, மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.
கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், இந்த உர வகைகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன.தற்போது, 95 ஆயிரம் டன் யூரியா, 64 ஆயிரம் டன் டி.ஏ.பி., 46 ஆயிரம் டன் பொட்டாஷ், 73 ஆயிரம் டன் கூட்டு உரமும் கையிருப்பில் உள்ளது.சென்னையில் இருந்து, 8,000 டன், காக்கிநாடாவில் இருந்து, 4,000 டன், துாத்துக்குடியில் இருந்து, 4,000 டன் யூரியா, இம்மாதம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்திற்கு தேவையான உரங்களை வழங்க வேண்டும் என, மத்திய உரத்துறை அதிகாரிகளிடம், தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வலியுறுத்தினர்.அதை ஏற்று, ஜூலையில், 72 ஆயிரத்து, 900 டன் யூரியா; 22 ஆயிரத்து, 600 டன் டி.ஏ.பி.; 28 ஆயிரத்து, 600 டன் பொட்டாஷ்; 41 ஆயிரத்து, 600 கூட்டு உரங்கள் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், வேளாண் துறை அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE