சண்டிகர்: சீன நிறுவனங்கள் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு அளித்த நன்கொடைகளை மத்திய அரசு திருப்பி அளிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மத்திய அரசு, பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் மோடியும், உறுப்பினர்களாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் உள்ளனர். இதற்கிடையே இந்திய - சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுந்தது. இதற்கிடையே சீன நிறுவனங்களால் முதலீடு பெறப்பட்ட இந்திய நிறுவனங்கள் பி.எம் கேர்சுக்கு உதவி அளித்துள்ளன. இந்நிலையில் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியதாக குற்றம் சாட்டிய பாஜ., சீன நிறுவனங்களின் நன்கொடையை பெற்றுள்ளதாக காங்., குற்றம் சாட்டியது.

இது குறித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிழக்கு லடாக் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், சீனாவில் இருந்து மத்திய அரசு ஏதேனும் நன்கொடை பெற்றிருந்தால் அதை திருப்பித் தந்துவிட வேண்டும். அந்த நாட்டின் நிறுவனங்கள் மூலம் வரும் பணத்தை நாம் பெறுவது நியாயமாக இருக்காது. சீனாவை சேர்ந்த சில நிறுவனங்கள் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ஏராளமாக நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. எவ்வளவு பணம் கொடுத்துள்ளன என்பது முக்கியமல்ல.

இப்போதுள்ள சூழலில் நாம் கொரோனாவில் படும் துன்பத்துக்கும் சீனாதான் காரணம். 2-வதாக எல்லையில் நமது வீரர்கள் 20 பேரை இழந்து, பதற்றமான சூழலை எதிர்கொண்டதற்கும் சீனாதான் காரணம். எனவே, சீன நிறுவனங்களிடம் இருந்து நாம் ஒரு ரூபாய் கூட வாங்கக்கூடாது. அவ்வாறு பெற்றிருந்தால் அதை திரும்பிக் கொடுக்க இதுதான் சரியான நேரம். அவர்களின் பணம் இல்லாமல் நம்மால் எதையும் சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.