புதுடில்லி; ''அமலாக்கத் துறையினர், அரசியல் உள்நோக்கத்துடன் என்னிடம் விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் அளித்தேன். ஆனால், நான் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு, அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை,'' என, காங்., பொருளாளர் அகமது படேல் கூறினார்.

வழக்குப் பதிவு
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, 'ஸ்டெர்லிங் பயோடெக்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான சந்தேசரா குடும்பத்தினர், வங்கியில், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.அதை வேறு வழிகளில் செலவு செய்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் வங்கி முறைகேடு என, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த முறைகேட்டில், காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலுக்கும் தொடர்பிருப்பதாக கூறி, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரது வீட்டுக்குச் சென்று, மூன்று முறை விசாரணை நடத்தினர்.

இது குறித்து, அகமது படேல் நேற்று கூறியதாவது:விசாரணைக்காக என் வீட்டுக்கு மூன்று முறை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு நன்றி. அவர்கள் என்னிடம், 128 கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கு பொறுமையாக பதில் அளித்தேன்.விசாரணைஅவர்களிடம், 'சந்தேசரா குடும்பத்தினரால், குஜராத் மாநில அரசில் பயன் அடைந்தது யார்?' என்ற ஒரே ஒரு அடிப்படை கேள்வியை மட்டும் கேட்டேன். அமலாக்கத் துறை அதிகாரிகளால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.என்னையும், என் குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கத்துடனும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாருடைய துாண்டுதலின்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் இதைச் செய்கின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE