புதுடில்லி: காங்., பொதுச் செயலர் பிரியங்காவிற்கு, 'பங்களாவை ஒரு மாதத்திற்குள் காலி செய்யுங்கள்' என, மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்ததும், குடும்பமே ஆடிப் போய்விட்டது. இவ்வளவு சீக்கிரம் இது நடக்காது என நினைத்திருந்த பிரியங்காவிற்கும், சோனியாவிற்கும், இது பெரிய இடியாக இறங்கியுள்ளது' என்கின்றனர், பா.ஜ., கட்சியினர். ஆனால், வெளிப்படையாக எந்த சலனமும் சோனியா குடும்பத்தாரிடம் இருந்து வரவில்லை.
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிற்கு, தன் வீட்டை மாற்றப் போவதாக சொல்லியிருக்கிறார், பிரியங்கா. கடந்த, 1997ல் பிரியங்கா - ராபர்ட் வாத்ரா திருமணம் நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த தேவகவுடா, மத்தியில் காங்., தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். தனக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதால், பிரியங்காவிற்கு பெரிய தனி அரசு பங்களாவை ஒதுக்கி, தம்பதி.யை தனிக் குடித்தனம் வைத்தார், தேவகவுடா.

ராபர்ட் வாத்ராவின் வீடு இருக்கும் இடம், பாதுகாப்புக்கு ஏற்றதல்ல எனக் கூறி, தனி பங்களாவை ஒதுக்கியதற்கு, அப்போது காரணம் சொல்லப்பட்டது. 'வீட்டை காலி செய்யும் விவகாரத்தில், யாரும் எதுவும் பேச வேண்டாம்' என, கட்சி தலைவர்களுக்கும், பிரியங்கா கட்டளையிட்டுள்ளாராம். இது விஷயமாக, நீதிமன்றத்திற்கும் போகப் போவதில்லையாம். லக்னோவில் முகாமிட்டு, பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக, பிரியங்கா அரசியல் செய்யப் போகிறாராம்.
'இந்த விவகாரத்தில், அரசியல் முதிர்ச்சி உடன் பிரியங்கா செயல்படவில்லை' என்கின்றனர், காங்., மூத்த தலைவர்கள். 'எப்போது எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழுவினரின் பாதுகாப்பு, 'வாபஸ்' பெறப்பட்டதோ, அப்போதே அரசு வீட்டை, பிரியங்கா காலி செய்திருக்க வேண்டும்; அப்படி செய்திருந்தால், அரசியல் ஆதாயம் கிடைத்திருக்கும்' என, அங்கலாய்க்கின்றனர், காங்., சீனியர்கள்.

இன்னொரு பிரிவினரோ, 'கணவர் வாத்ராவுக்கு டில்லியில் பிசினஸ். எப்படி இவர் லக்னோவில் குடும்பம் நடத்த முடியும்? லக்னோவில் போய், யோகிக்கு எதிராக, பிரியங்காவால் எதுவும் செய்ய முடியாது' என்கின்றனர். பா.ஜ.,வின் அதிரடி அரசியலுக்கு முன், பிரியங்காவின் அரசியல் எடுபடுமா என, முலாயமும், மாயாவதியும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE