பாட்னா: பீகாரில் மாநிலத்தில் ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா கண்ட ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுந்தது. எலிகளை காரணம் காட்ட வேண்டாம் என எதிர்கட்சிகள் கூறி உள்ளன.

இது குறித்து கூறப்படுவதாவது: பீகாா் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மற்றும் சம்பரானை இணைக்கும் விதமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கந்தக் ஆற்றில் சத்தர்காட் பாலத்தை முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஜூன் மாதம் 16 ம் தேதி திறந்து வைத்தார்.
இந்த பாலம் கட்டுவதற்கு கடந்த 2012 ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டது. பாலம் கட்டும் பணியை மாநில புல் நிர்மான் நிகாம் லிமிடெட் என்ற நிறுவனம் செய்து இருந்தது. பாலம் கட்டுவதற்கு எட்டுஆண்டுகாலம் வரையில் பணி நீடிக்கப்பட்டு ஒரு வழியாக கடந்த மாதம் 16 ம்தேதி முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். சரியாக 29 வது நாளில் பாலம் இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாகக்கி உள்ளது.
கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சம்பாரனுக்கும் இடையேயான ஒரே முக்கிய இணைப்பு பாலம் என்பதால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.மேலும் கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் மழை பெய்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி மற்றும் காங்கிரசின் மாநிலதலைவர் மதன் மோகன் ஜா, எல்,ஜே.பி., கட்சியின் எம்.பி சிராக பவன் உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. மேலும் இச்சம்பவத்திற்கு எலிகளை குற்றம் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த 2017 ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள சம்பவத்திற்கு எலிகள் அதிக அளவில் துளைகள் போடுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அமைச்சர் ஒருவர் கூறிஇருந்தார்.
இதுமட்டுமல்லாது மற்றொரு சம்பவமான போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்கள் காணாமல் போனதற்கு எலிகளே காரணம் என கூறப்பட்டது. இதனை மேற்கோள் காட்டும் எதிர்கட்சிகள் தற்போது பாலம் இடிந்த சம்பவத்திற்கும் எலிக்ளை காரணம்காட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளன.