வாஷிங்டன்:அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன். இதில் உலகில் தலைசிறந்த ஏவுகணைகள் உள்ளன. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் (மணிக்கு 1,225 கி.மீ) 17 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் ஹைபர்சானிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது இதனை சூப்பர் டூப்பர் ஏவுகணை எனக்கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.
இந்த அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு நன்றாக இயங்குகிறது என்பதை பென்டகன் நிர்வாகிகளும் அறிவித்தனர். ஆனால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை காட்டிலும் ரஷ்யாவும் சீனாவும் முன்னோடிகளாக விளங்குகின்றன. தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைபர்சானிக் ஏவுகணையைபோல சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தயாரித்துவிட்டன.
இவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிநவீன ஏவுகணையை 2023 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்திருந்தார்.

ஹைபர்சானிக் ஏவுகணைகள் மணிக்கு 3,800 மைல் வேகத்தில் பயணிக்கும். எந்த உயரத்தில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஏவுகணையை ஏவ முடியும்.பொதுவாக பாலிஸ்டிக் மிசைல் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பாதையை ஏவுகணை தடுப்பு கருவியால் கணிக்க இயலும். ஆனால் ஹைபர்சானிக் ஏவுகணையின் பாதையை இந்த இயந்திரங்கள் கணிப்பது மிகக் கடினம். இந்த ஹைபர்சானிக் ஏவுகணையை ஒரு நாட்டின்மீது ஏவிவிட்டால் அந்நாட்டுக்கு அழிவு உறுதி. 2023 ஆம் ஆண்டுக்குள் இந்த ஹைபர்சானிக் ஏவுகணை அதன் தளத்தில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.