புதுடில்லி : ராஜஸ்தானில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தி்ல் குற்றம் சுமத்தப்பட்ட 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1985 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வரான சிவசரன் மாத்தூர் மீண்டும் முதல்வர் தேர்தலில் நின்றார். இத் தேர்தலில் மாநிலத்தின் டீக் பகுதியை சேர்ந்த ராஜா மன் சிங் என்பவர் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வருக்கான பிரசார வாகனத்தை ராஜா மன்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரின் ஆதரவாளர்கள் இடையே தேர்தல் பகை உருவானது . இந்நிலையில் தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு மறுநாள் டீக் பகுதியில் உள்ள வேளாண் சந்தையில் மோதல் நடந்துள்ளது. இந்த மோதலில் ராஜ்மான்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 11 போலீசார் உள்ளிட்ட 18 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 3 பேர் வழக்கு நடந்து கொண்டிருந்த போது காலமாயினர். மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 11 போலீசார் மீதான வழக்கு சுமார் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது வழக்கின் குற்றவாளிகளான 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராஜா மன்சிங் 1952 ம் ஆண்டில் இருந்து 1984 ம் ஆண்டு வரையில் தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.