ஓசூர்: சூளகிரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலர் வந்து செல்கின்றனர். அதேபோல், சார்பதிவாளர் அலுவலகத்திற்கும், மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. கொரோனா காலக்கட்டம் என்பதால், மக்களுக்கு தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில், சூளகிரி, தி.மு.க., சார்பில் தலா, 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இரு தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இதில், சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, டாக்டர் வெண்ணிலாவிடம் ஒரு இயந்திரத்தையும், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, சார்பதிவாளர் பாஸ்கரனிடம் ஒரு இயந்திரத்தையும், தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாக்கியராஜ் நேற்று வழங்கினார். இந்த இயந்திரத்தின் அடியில் கையை வைத்தாலே, கிருமி நாசினி மருந்து வந்து விடும். இதனால் இயந்திரத்தை தொடாமல், மக்கள் பயன்படுத்த முடியும். தி.மு.க., இளைஞரணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி, சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ், கவியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE