கோவை: கோவை மாவட்டத்தில் இன்று, 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; அதேவேளையில், 202 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளது. அதேவேளையில், தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. நேற்று 220 பேருக்கும் இன்று 313 பேருக்கும் தொற்று உறுதியானதால் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,775 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,602 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 380 தெருக்களில் 900த்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று 103 பேர் குணமடைந்த நிலையில், இன்று, 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், பாதிப்பிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை விதைத்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE