புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்காத, 35 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, விளக்கம் கேட்டு, எஸ்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், 40 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. எஸ்.பி.,யாக, அருண்சக்தி குமார் பணிபுரிந்த போது, கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி சீட்டு, மணல் கடத்தல் ஆகியவை முற்றிலும் தடுக்கப்பட்டிருந்தன.அவர், சென்னைக்கு மாறுதலாகி சென்றார். புதுக்கோட்டை, எஸ்.பி.,யாக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றார். சட்டவிரோத சம்பவங்கள் குறித்தும், அதை கண்டுகொள்ளாத போலீசாரின் மெத்தனம் குறித்தும், அவருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், 35 ஸ்டேஷன்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாரிடம் விளக்கம் கேட்டு, எஸ்.பி., 'மெமோ' அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:தங்கள் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், சீட்டு விளையாட்டு, லாட்டரி விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறி விட்டீர்கள். உங்கள் மீது ஏன், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது. இதற்கு, மூன்று நாட்களில் எழுத்துபூர்வமாக, விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE