கோவை:கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 4,052 பேரில் 2,407 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கோவையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில், 296 பேர் பூரண குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, 2,407 ஆக உயர்ந்துள்ளது.கோவை ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டு ஆண்கள், போத்தனுார் குற்றப்பிரிவு துணை காவல் ஆய்வாளர், பி.ஆர்.எஸ்.,காவலர் குடியிருப்பில் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் 23, கணபதியில் 15, போத்தனுாரில் 13, குனியமுத்துார் மற்றும் சரவணம்பட்டியில் தலா 10 பேர், உட்பட மொத்தம், 273 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு, 4,052 ஆக உயர்ந்துள்ளது.திருமலைநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, கோவில்மேடு நீலி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த 81 வயது முதியவர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 1,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE