மும்பை: மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜ., தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து வேறுபாடால், பாஜ., சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனையடுத்து காங்., மற்றும் தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும், சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜ., முயற்சித்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன. இது சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சிவசேனா தொடர்ந்து மத்திய பாஜ., அரசை விமர்சித்து வருவதால், கூட்டணி கட்சிகள் அமைதி காத்து வருகின்றன.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில பாஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜ., இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. எனினும், மாநில மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவ்வாறு ஒரு சூழ்நிலை உருவானால், சிவசேனாவுடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியமைக்க பாஜ., தயாராக உள்ளது. இந்துத்துவா கொள்கையில் இரு கட்சிகளுமே ஒரே மாதிரியான சிந்தனையைக் கொண்டவை. எனவே, கூட்டணி அமைவதில் கொள்கை ரீதியாக எந்த சிக்கலும் ஏற்படாது. சிவசேனாவுடன் பாஜ., கூட்டணி அமைத்தாலும் தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE