ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் இன்று சச்சின் பைலட் காங்., எம்.பி. ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்ததாக கூறப்படுகிறது. சமரச பேச்சுவார்த்தைக்கு மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக் கெலாட் தனக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்க சட்டசபை கூட்டத்தொடர் ஆக. 14-ல் கூடவிருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலை ஒரு புறம் இருக்க சச்சின் பைலட்ஆதரவு எம்.எல்.ஏ. பன்ஹர்லால் சர்மா , இன்று திடீரென முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்தது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அசோக் கெலாட் கூறியது, பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.க்கள் மீ்ண்டும் திரும்பி வருவர் என்று நான் முன்பே கூறினேன். மேலும் சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.
சமரசம்
இதற்கிடையே சச்சின் பைலட் ராகுல், பிரியங்கா சந்திப்பு குறித்து காங்.பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியது, ராகுலை சந்தித்த சச்சின் பைலட் தனது மனகுமுறலை வெளிப்படுத்தியுள்ளார். காங்.குடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவி்துள்ளார். சச்சின் பைலட் பிரச்னை குறித்து விவாதிக்க மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மேலிடம் அமைத்துள்ளது என்றார். இதன் மூலம் இன்று நடந்த அடுத்தடுத்த திருப்பங்களால் ராஜஸ்தான் அரசியல் சிக்கலுக்கு விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என தெரிகிறது.