சென்னை: சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தி, நீட் தேர்வை நடத்த முடியாது என தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக ஆட்சியில் பின்பற்றியவாறு, பிளஸ் 2 வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதில், பாஜ.,வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, அதிமுக அரசு பரிதாபமாகப் படுதோல்வி அடைந்துவிட்டது.
நீட் தொடர்பான மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தர மறுத்து, அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன என்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியானபோதும், அதை மூடி மறைப்பதிலேயே முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு குறியாக இருந்தது. சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்தச் சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். இனியும் மவுனம் சாதிக்கக்கூடாது.

கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளாத தமிழக அரசோ, முதல்வரோ இந்தத் தலையாய பிரச்னையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதில் இருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்குத் தெரிந்துவிட்டது.
பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முனைப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளனர். தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச்செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

நீட் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் அடைந்த படுதோல்வியை மூடி மறைக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. 'இது குறித்து அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று முதல்வர் திடீரென அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?
பல்லாயிரம் கோடி டெண்டர், கொள்முதல் விவகாரங்களில் ஒவ்வொரு மாவட்டமாக ஓடோடிச் சென்று காட்டும் தீவிரத்திலும் அக்கறையிலும் கோடியில் ஒரு பங்கையேனும் மாணவர்கள் நலனில் காண்பிக்க முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE