புதுடில்லி : முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை, இன்று டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தார்.
தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார். அங்கு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், தனது அதிரடி நடவடிக்கைகளால் பெயர் பெற்றார். பெங்களூரு தெற்கு மண்டல துணை கமிஷனராகவும் பதவி வகித்த அவர் கடந்த ஆண்டு பதவி விலகினார். சொந்த ஊர் திரும்பிய அவர், இயற்கை விவசாயம் பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக, அரசியலை தொடர்புபடுத்தி அவர் பெயர் வெளிவந்து கொண்டிருந்தது. நடிகர் ரஜினி துவங்கும் அரசியல் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில், இன்று அவர், டில்லியில் தமிழக பா.ஜ., தலைவர் முருகன், பா.ஜ., தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

இதன் பின்னர் அண்ணாமலை கூறுகையில், பா.ஜ.,வை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பா.ஜ.,வில் சேரவில்லை. மோடியின் பணிகள் காரணமாக சாதாரண தொண்டராக பா.ஜ.,வில் இணைந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE