தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சென்னையின் நெரிசலை போக்கவும், தென் மாவட்டங்களின் மேம்பாட்டிற்கும் மதுரையில் இரண்டாம் தலைநகர் அமைக்க வேண்டும் என்று தினமலர் கட்டுரை வெளியிட்டது. இதனை பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் இப்பகுதியில் வெளியாகிறது...
மதுரை ஒரு முன்மாதிரி
மதுரை சான்றோர் காலத்திலிருந்து பல துறைகளில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மருத்துவ சேவைகளில் மதுரை முன்மாதிரியாக உள்ளது. தென் தமிழகத்தில் அனைத்து மாவட்ட மக்கள் சிறப்பு சிகிச்சைக்கு வருவது மதுரைக்கே. குறிப்பாக ஆர்த்ரோஸ்கோபி, மூட்டு மாற்று சிகிச்சை, விளையாட்டு விபத்து, உறுப்பு மாற்று சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி, இதயவியல், நரம்பியல், புற்றுநோய், சிறப்பு எலும்பியல் சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் மதுரையை அங்கீகரித்துள்ளனர். மெடிக்கல் டூரிஸம் துரிதமாக வளர்கிறது. மருத்துவக் கவுன்சில் மற்றும் மருத்துவமனை சார்ந்த அரசு அங்கீகாரம் பெற தற்போது சென்னைக்கு செல்கிறோம். மதுரை இரண்டாவது தலைநகரம் ஆகிவிட்டால் சுகாதார பிரிவு மற்றும் இதர பிரிவுகளின் அரசு அங்கீகாரம் மதுரையிலேயே பெற்றுவிடலாம். சென்னை அரசு அலுவலகங்களில் பணிச்சுமை சீராக பிரிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
-டாக்டர் கே என் சுப்ரமணியன்,
முதுநிலை எலும்பு மூட்டு மற்றும் நுண்துளை சிகிச்சை நிபுணர், மதுரை.
இனியாவது விழித்து கொள்ள வேண்டும்
தென் மாவட்டங்களில் முந்தைய தி.மு.க., ஆட்சியில் 1997ல் ஜாதிக்கலவரங்கள் நடந்தன. இதுகுறித்து அப்போதைய அரசு அமைத்த நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான குழு தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததே பிரச்னைகளுக்கு காரணம் என சுட்டிகாட்டியது. அதன் பிறகும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை. சென்னை தலைநகராக இருப்பதால் தலைமை அலுவலகங்கள் இருப்பதால் அதை சுற்றியே தொழிற்சாலைகள் அமைகின்றன. இதனால் சென்னையே திணறுகிறது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சி சீராக இருக்க மதுரையை 2வது தலைநகராக்க வேண்டும். அதன் மூலம் தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் வர வாய்ப்புகள் உருவாகும். தென் மாவட்டத்தினர் இனியாவது விழித்து கொள்ள வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து மதுரையை 2வது தலைநகராக்க குரல் கொடுக்க வேண்டும்.
-சகாதேவன்,
கட்டுமான நிறுவன இயக்குனர், மதுரை.
மதுரைக்கு மற்றுமொரு அங்கீகாரம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை 2வது தலைநகராக அறிவிக்கப்பட்டால் அது மற்றொரு அங்கீகாரமாக அமையும். தற்போதைய நிலையில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் வளர்ச்சி மாநிலத்தில் மற்ற பகுதிகளில் இல்லை. ஒட்டுமொத்த தமிழகமும் வளர்ச்சி பெற பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பரவலாக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் பார்வை தென் மாவட்டங்களில் திரும்பும். வேலைவாய்ப்பு பெருகும். தனிமனித வருமானம் உயரும். ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமும் முழு வடிவம் பெறும். இதை சாத்தியமாக்க தென் தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
-நசீர் உசேன்,
மருத்துவ ஆய்வக நலச்சங்க தலைவர், மதுரை.
மதுரைக்கு மற்றுமொரு அங்கீகாரம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை 2வது தலைநகராக அறிவிக்கப்பட்டால் அது மற்றொரு அங்கீகாரமாக அமையும். தற்போதைய நிலையில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் வளர்ச்சி மாநிலத்தில் மற்ற பகுதிகளில் இல்லை. ஒட்டுமொத்த தமிழகமும் வளர்ச்சி பெற பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பரவலாக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் பார்வை தென் மாவட்டங்களில் திரும்பும். வேலைவாய்ப்பு பெருகும். தனிமனித வருமானம் உயரும். ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமும் முழு வடிவம் பெறும். இதை சாத்தியமாக்க தென் தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
-நசீர் உசேன், மருத்துவ ஆய்வக நலச்சங்க தலைவர், மதுரை.
குரல் கொடுக்கும் கட்சிக்கே ஆட்சி
மதுரை என்றாலே மல்லிகைக்கு புகழ் பெற்றது. மதுரையில் நீதியையும், நேர்மையும் கற்புக்கரசி கண்ணகி நிரூபித்த வரலாறு உள்ளது. இத்தயை பேறு பெற்ற மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை அமைக்க முதலில் குரல் கொடுத்தது 'தினமலர்'. அதுபோன்று தென் மாவட்ட மக்களின் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், பொருளாதாரம் சிறப்பாக அமைய மதுரை 2 வது தலைநகரமாக மாற வேண்டும். அதற்கு தொடர்ந்து வலியுறுத்தும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள். 2 ம் தலைநகரமாக மதுரை வர வேண்டும் என்று குரல் கொடுக்கும் கட்சியே வருகின்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும். பலதரப்பட்ட மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
- விஜயரங்கன்,
வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் அருப்புக்கோட்டை
காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு?
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மக்கள் தொகைபெருக்கம் உட்பட, பல்வேறு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நலன் கருதி, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு இப்போதே மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை, வந்தோரை வாழ வைக்கும் நகரமாக திகழ்கிறது. சென்னை சென்றால், எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், தொழிலாளர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர்.
விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், உயர்தர மருத்துவமனைகள், உயர் கல்வி நிறுவனங்கள் என, அனைத்து வசதிகளும் இருப்பதால், சென்னை உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக திகழ்கிறது. தமிழகத்தில் தொழில் துவங்க முன்வரும் தொழில் முதலீட்டாளர்கள், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில், தொழில் துவங்கவே விரும்புகின்றனர்.இதன் காரணமாக, சென்னை மாநகரத்தில், நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
விரிவாக்கம்
சென்னையை சுற்றியுள்ள பகுதிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டுகள் எண்ணிக்கை, 200 ஆக மாற்றப்பட்டுள்ளது.ஆனால், மூன்றில் இரு பங்கு பகுதிகளில், இன்னும் முறையான குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புகளை, ஏற்படுத்த முடியவில்லை.கோடை காலம் வந்தால், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் என, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஏரிகள் இருந்தாலும், கோடை காலத்தில் ஏமாற்றி விடுகிறது.
இதனால், வீராணம் ஏரியையும், கிருஷ்ணா நதி நீரையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், தாகம் தீர்க்கும் தண்ணீர் தட்டுப்பாடு, முழுமையாக தீர்வதாக இல்லை.வருங்காலத்தில், இதுபோன்ற சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து, 1983ல், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தலைநகரை திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்தார்.
மாநிலத்தின் மையப்பகுதியாக, திருச்சி திகழ்வதால், அனைத்து மாவட்ட மக்களும், வந்து செல்ல வசதியாக இருக்கும் எனக் கருதி, திருச்சி தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒத்துழையாமை, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், தலைநகரம் மாற்றம் குறித்து சிந்திக்கவில்லை. தலைமைச் செயலகத்தை, சென்னைக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு, அதுவும் கைவிடப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று பரவல், தலைநகரம் மாற்றத்திற்கான அவசியத்தை, மீண்டும் உணர்த்தி உள்ளது.
தற்போது, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடி, மக்கள் தொகை பெருக்கம், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, சுற்றுச்சூழல் மாசு போன்றவை அதிகரித்துள்ளன. நிலத்தின் மதிப்பு கோடிகளை தொட்டு விட்டதால், நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு கனவாகி விட்டது.
சென்னையில் இடம் இல்லாததால், அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மக்கள் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். இதனால், சென்னையை சுற்றிய மாவட்டங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.சென்னையில், குடிசைப்பகுதி என்றாலும் சரி, அடுக்கு மாடிகள் என்றாலும் சரி, வாடகை வீடுகளில் குடியிருப்போர், தாங்கள் பெறும் சம்பளத்தின் பெரும்பகுதியை, வாடகைக்கு செலவிட வேண்டியுள்ளது.
தொழிலாளர் முதல் அதிகாரிகள் வரை, வாழ்க்கையை நடத்த, திணறி வருகின்றனர். தற்போதே, இந்த நிலை என்றால், இன்னும், 10 அல்லது, 20 ஆண்டு களில் நிலைமை என்னவாகும் என, நினைத்து பார்க்க வேண்டும்; அதற்கேற்ப திட்டமிடல் அவசியம்.
ஆந்திரா அடித்தளம்
இதுபோன்ற சூழலை உணர்ந்த ஆந்திர அரசு, மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த களமிறங்கி உள்ளது. கர்நாடகாவில், சில அரசு துறைகளின் தலைமையகத்தை, வடக்கு கர்நாடகா பகுதிகளுக்கு மாற்ற, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற திட்டமிடலை, தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தின் தலைநகர் சென்னை என்பதில், எந்த மாற்றமும் வேண்டாம். அதற்கு இணையாக, இரண்டாம் தலைநகர் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த தலைநகர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் எளிதாக வந்து செல்லும் மையப்பகுதியில் இருப்பது அவசியம்.இதற்கு, திருச்சியை விட, மதுரை சரியான தேர்வாக கருதப்படுகிறது. திருச்சியின் வளர்ச்சி வேகத்தை விட, மதுரையின் வளர்ச்சி தற்போது வேகமாக உள்ளது.
மதுரையில், சென்னை உயர் நீதிமன்றம் கிளை; சர்வதேச விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. மத்திய அரசின் உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை, மதுரையில் அமைக்கப்படுகிறது. தென் மாவட்ட மக்களின் வசதிக்காக, இவையெல்லாம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, 150 கி.மீ.,ரில், துாத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் சாலை கட்டமைப்பு வசதிகளும் தேவைக்கேற்ப உள்ளன.
நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் தேவைப்படும். மதுரை புறநகர் பகுதியில், தேவையான நிலத்தை எளிதாக தேர்வு செய்யமுடியும்.எனவே, தமிழகத்தின் நிர்வாக நகரை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தென் மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், எதிர்கால தேவை கருதியும், தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக துவக்க வேண்டும். அரசு சரியாக முடிவெடுத்தால், சென்னையில் நெருக்கடி நிலை குறையும்; மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களும் வேகமாக வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
தலைநகரை மாற்ற வேண்டாம்!
தமிழகத்தின் தென் பகுதியில், 10 மாவட்டங்கள் உள்ளன. இங்கிருந்து தொழில், வேலைவாய்ப்பு, அரசுப்பணி என்று எதற்கெடுத்தாலும், சென்னை நோக்கி மக்கள் குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். ஒரு கோடி மக்கள் தொகை உள்ள சென்னையில், இன்னும் மக்கள் தொகை பெருகினால் தாங்காது. சென்னையில் இப்போது வளர்ச்சி என்பதை விட, 'வீக்கம்' தான் உள்ளது.
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் வளர்ச்சி பெற, தொழில் வளம் பெருக, நிர்வாக ரீதியாக, சென்னையின் பளு குறைக்கப்பட வேண்டும்.சென்னையின் துறைமுக வசதிகளை கருத்தில் வைத்து, பெரிய தொழிற்சாலைகளை, தென் மாவட்ட பகுதியில் துவங்க நிறுவனங்கள் விரும்புவதில்லை. எனவே நிர்வாகத்தை பிரித்து, தென் மாவட்டத்திற்கு கொண்டு சென்றால், குறைந்தது, 20 சதவீத மக்களாவது சென்னையை விட்டு வெளியேறுவர்.
சென்னையில் இன்னும் புதிய தொழிற்சாலைகள் துவங்க முடியும். சென்னைக்கு வந்து செல்லும் மக்கள் பெருக்கத்தை பெருமளவு குறைத்தால், சென்னையில், சுற்றுப்புற மாவட்டங்களில், போக்குவரத்து நெரிசல் குறையும். சென்னையை இன்னும் வளர்க்க இயலும். தலைநகரை சென்னையை விட்டு மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை; இரண்டாவது தலைநகராக, தென் மாவட்டங்களின் தலைநகர் என்று போற்றப்படும் மதுரையை மாற்றலாம்.
சட்டசபை, கவர்னர் மாளிகை போன்றவற்றை சென்னையில் இருக்குமாறு செய்து விட்டு, அரசின் துறைகளில் பாதியை மதுரைக்கு மாற்றி, அதற்கான செயலகங்களை அமைக்கலாம். கல்வி, பொதுப்பணி, விவசாயம், கால்நடைத் துறை, கூட்டுறவு, அறநிலையத் துறை என, பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்களை இரண்டாவது தலைநகருக்கு மாற்றலாம்.
தமிழகத்திற்கான மத்திய அரசின் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் சென்னையிலேயே உள்ளன. மதுரையை இரண்டாவது தலைநகர் ஆக்கினால், அதில் கணிசமான அலுவலகங்களை மதுரைக்கு மாற்ற முடியும்.
இது புதுசு அல்ல!
ஒரு மாநிலத்திற்கு, இரண்டு தலைநகர் என்பது புதிதல்ல. ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, இரண்டு தலைநகர் இருந்தது. குஜராத்தில் அருகருகே இருந்தாலும் காந்திநகரில் பாதியும், அகமதாபாத்தில் பாதியும் என, அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைய உள்ளன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், மூன்று தலைநகரங்கள் உள்ளன. பல வெளிநாடுகளில் இரு தலைநகரங்கள் உள்ளன.
- நமது நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE