புதுடில்லி:'நீட்' தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கிறது.

'நீட்' மற்றும் ஜே.இ.இ. பிரதான நுழைவுத் தேர்வுகளை கொரோனா பரவல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளால் ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 'போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள், ஆளும் ஆறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

அதேபோல் கொரோனா பரவலுக்கு இடையே தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை கஷ்டங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷன், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று நடக்கிறது. இதற்கிடையே ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் கடந்த 1ம் தேதி துவங்கியது குறிப்பிடத்தக்கது. 6ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடக்கின்றன. நீட் தேர்வு செப். 13ம் தேதி நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE