பாலக்காடு:கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், காயம்குளத்தைச் சேர்ந்தவர் நவ்பல், 29. பத்தனம்திட்டாவில், '108' ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்த, 42 வயது மற்றும் அவரது, 19 வயது மகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றார்.
ஆறன்முளை அரசு மருத்துவமனையில், பெண் அனுமதிக்கப்பட்டார். அவரது மகளை அடூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பினர். செல்லும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்பல், அந்த பெண்ணை சிறிதும் இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின், மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் நவ்பலை கைது செய்தனர். அவர் உடனடியாக, பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கேரள மகளிர் நல ஆணையம் நேரடியாக வழக்கு பதிவு செய்தது.

கொரோனா நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சுகாதாரத் துறை அலுவலகம் முன், பா.ஜ., இளைஞர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE