மதுரை: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜ.,வில் இணைந்தார்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். இவர் தனது மகள் நேத்ராவின் படிப்பு செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் கொரோனா காலத்தில் பலருக்கு உதவி செய்தார். இவரது செயலை கடந்த மே மாதம் ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். இதையடுத்து மோகன் குடும்பத்துடன் மதுரை மாநகர் மாவட்ட பாஜ., தலைவர் கே.கே.சீனிவாசன் முன்னிலையில் பாஜ.,வில் உறுப்பினராக இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த மோகன், 'நான் பாஜ.,வில் சேரவில்லை. பாஜ.,வினர் என்னை வாழ்த்த வந்தபோடு, ஒரு கார்டு கொடுத்தனர். வாழ்த்து அட்டை என நினைத்தே அதை வாங்கினோம்,' என்றார்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு மோகன், மனைவி மற்றும் மகளுடன் பாஜக மாநில பொதுச் செயலர் சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜ.,வில் இணைந்தார். அவருக்கு சீனிவாசன் உறுப்பினர் அட்டை வழங்கினார். சீனிவாசன் கூறுகையில், ‛மன் கி பாத் நிகழ்ச்சியில் மோகனை பிரதமர் பாராட்டினார். அப்போது அவர் பாஜ.,வில் இணைய முன்வந்த நிலையில், சிலரின் அச்சுறுத்தல் காரணமாக அவர் பாஜ.,வில் இணையவில்லை. இப்போது 300 பேருடன் அவர் பாஜ.,வில் இணைந்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலில் உள்ள 6 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க அவர் முடிவு செய்துள்ளார்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE