புதுடில்லி:கடந்த 2013ல் துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் 1.84 கோடி ரூபாய் சொத்துக்களை பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 2013ல் பல்வேறு சந்தர்ப்பங்களில் 17.86 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட அரிபா ஹாரிஸ் மற்றும் அசிபா வீரா என்ற இரு பெண்களை சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 2013ல் கைது செய்தனர்.இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. கேரளாவை சேர்ந்த தங்க வியாபாரி அஷ்ரப் கல்லுங்கல் என்பவருக்காக துபாயை சேர்ந்த பைஸ் என்பவர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அஷ்ரப் கல்லுங்கல் பைஸ் அவர்களுக்கு உதவிய சுங்கத் துறை முன்னாள் துணை கமிஷனர் மாதவன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கை விசாரிக்க துவங்கினர்.
கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தை துபாயில் இருந்து பணப்பரிமாற்ற மோசடி மூலம் கேரளாவுக்கு கொண்டு வந்தது தெரிந்தது.இதையடுத்து குற்ற வாளிகளுக்கு சொந்தமான 85 லட்சம் ரூபாய் வங்கி வைப்பு நிதி 98 லட்சம் ரூபாய் அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE